‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, அருந்ததீ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அனுஷ்கா நடிப்பில் வெளியான பஞ்சாக்ஷரி படம் ஆந்திராவில் 75 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் ‘பஞ்சமுகி’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. படத்தில் பஞ்சாக்ஷரி, ஹனி என இரட்டை வேடங்களில் அனுஷ்கா நடித்துள்ளார். கதாநாயகனாக புதுமுகம் விஜய் சாம்ராட் நடித்து இருக்கிறார். முக்கிய வேடத்தில் நாசர் நடித்துள்ளார். இவர்களுடன் ‘தூள்’ சகுந்தலா, ‘கஜினி’ வில்லன் பிரதீப் ராவத், மற்றொரு வில்லனாக ஸ்டண்ட் மாஸ்டர் செல்வம் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். கிராமத்து பெண்ணான பஞ்சமுகி எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே சொல்வதால் ஏற்படும் பிரச்சினைகள்தான் இந்த படத்தின் கதை. படத்தில், “குத்தாதே குத்தாதே பெண் மீது குத்தாதே…கண்ணால் குத்தாதே” என்ற கவர்ச்சி நடன பாடல் இடம்பெறுகிறது. இந்த பாடலுக்கு, இதுவரை அணிந்திராத அளவுக்கு கவர்ச்சி உடை அணிந்து ஆடிப்பாடியுள்ளார் அனுஷ்கா. வி.சமுத்ரா கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ் எஸ்.பி.சரண் வழங்க, கே.வேணுகோபால் தயாரித்துள்ளார். சந்திரமுகி, அருந்ததீ வரிசையில் உருவான பயங்கர திகில் படம் இது
Categories: